கூடலூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து தொழிலாளி பலியானார்
- தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். 5பேர் காயமடைந்தனர்
- கூடலூர் விபத்தில் ஒருவர் பலி
கூடலூர்:
கோவையில் இருந்து குமுளிக்கு பெரியகுளம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் சென்றது. பஸ்சை ஜெயமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது50) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சசிகுமார் (48) பணியில் இருந்தார். பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இன்று காலை கூடலூர் வழியாக குமுளிக்கு சென்று கொண்டிருந்தது. பைபாஸ் சாலை அருகே விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு பஸ் எதிர்பாராத விதமாக சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் இடிபாடுகளில் சிக்கி கூடலூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாயி என்ற கிருஷ்ணமூர்த்தி (50) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காயம் அடைந்த பயணிகள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில் கூடலூரை சேர்ந்த வீராசாமி (60), பெருமாள் (66), மாடசாமி (56), திருப்பூரை சேர்ந்த மலர்விழி, காளியம்மாள் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்ததால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.