குளிச்சப்பட்டு கிராமத்தில் தூய்மை நடைப்பயண பேரணி
- பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தஞ்சாவூர்:
இன்று உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 587 ஊராட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி குளிச்சப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட தூய்மை நடை பயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, கிராம அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் சசிகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், 3-வது வார்டு உறுப்பினர் குருமூர்த்தி உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை, நெகிழி பொருட்களை பய ன்படுத்துவதில்லை, பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பேரணியில் பள்ளி மாணவ-மாணவியர், கிராம மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை சுமந்து வீதி வீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன் நன்றி கூறினார்.