உள்ளூர் செய்திகள்
காவல்துறை சார்பில் மகளிர் தின விழா: சினிமா பாடல்களை பாடி, நடனமாடி அசத்திய பெண் காவலர்கள்
- பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
- மகளிர் காவல் நிலைய போலீசார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மகளிர் காவலர்கள் பங்கேற்று சினிமா பாடலுக்கு நடனமாடினர். மேலும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி மற்றும் பெண் காவலர்கள் சின்ன கவுண்டர் படத்தில் இடம் பெற்ற முத்துமணி மாலை பாடலை மேடையில் பாடி அசத்தினர். இதில் கோவில்பட்டி மேற்கு, கிழக்கு, நாலாட்டின்புதூர், கழுகுமலை, கயத்தார் காவல் நிலையங்களை சேர்ந்த பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.