உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

Published On 2022-10-25 06:36 GMT   |   Update On 2022-10-25 06:36 GMT
  • எல்லம்மாளின் உடலை மீட்டு உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
  • மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 75 ). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இரவு அவர் சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நேற்று காலை நீண்டநேரம் வரை வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அதேபகுதியில் வசிக்கும் அவரது மகள் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் விரைந்து வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது எல்லம்மாள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவர் இயற்கையாக இறந்து இருக்கலாம் என்று அனைவரும் நினைத்தனர். இதைத் தொடர்ந்து எல்லம்மாளின் உடலை மீட்டு உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.

அப்போது எல்லம்மாளின் காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் கம்மல் மாயமாகி இருந்தது. மேலும் அவரது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் மூதாட்டி எல்லம்மாளின் உடலை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து சென்று எல்லம்மாளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் எல்லம்மாளின் வலது காதில் கம்மல், மூக்குத்தி மற்றும் கழுத்தில் தங்கச் செயின் அப்படியே இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News