புதிய கால்வாயில் திறந்துவிடப்பட்ட ஏரி உபரிநீர் வீடுகளை சூழ்ந்தது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
- ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் பக்கத்து ஏரிக்கு செல்லும் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு.
- உபரிநீர் செல்லும் நீர்வழிப்பாதைகளை உடனடியாக அளவீடு செய்து அனைத்து நீர்வழிப்பாதைகளிலும் கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தாரமங்கலம்:
மேட்டூர் அணையில் இருந்து வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் நீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 10-வது ஏரியான தாரமங்கலம் ஏரிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது முழுகொள்ளவை எட்டியது.
பின்னர் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் பக்கத்து ஏரிக்கு செல்லும் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்து பட்டா நிலங்களாக மாறியதால் உரிய வழிப்பாதை இல்லாமல் குடியிருப்புகள் மற்றும் நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இதனை தொடர்ந்து உபரிநீர் செல்லும் வழித்தடம் வருவாய் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வழியாக பொதுப்பணி துறையினர் கால்வாய் அமைத்துள்ளனர்.
இந்த புதிய கால்வாய் வழியாக நேற்று உபரிநீரை திருப்பி விட்டபோது அந்த தண்ண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வந்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர் .அதனை தொடர்ந்து பொக்லின் எந்திரம் கொண்டு உபரிநீரை மாற்று வழியில் திருப்பி விட்டுள்ளனர் .
உபரிநீர் செல்லும் நீர்வழிப்பாதைகளை அனைத்தையும் உடனடியாக அளவீடு செய்து அனைத்து நீர்வழிப்பாதைகளிலும் கால்வாய் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .