உள்ளூர் செய்திகள்

பலியான வேல்முருகன்.

நெல்லை மேம்பால பக்கவாட்டு சுவர் இடிந்து விபத்து: முதியவர் பலி- உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Published On 2023-05-18 09:08 GMT   |   Update On 2023-05-18 11:00 GMT
  • ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் உள்ளது.
  • ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் உள்ளது.

பக்கவாட்டு சுவர் இடிந்து விபத்து

கடந்த 3-ந்தேதி கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பால் பாக்கெட் வாங்குவதற்காக மொபட்டில் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இருந்த பெரிய அளவிலான கல் ஒன்று அவர் மீது விழுந்தது.

இதில் வேல்முருகன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

முதியவர் பலி

இந்நிலையில் இன்று அதிகாலை வேல்முருகன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணத்தை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்த அவரது உடலை சந்திப்பு போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்த ஈரடுக்கு மேம்பாலத்தில் ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News