உள்ளூர் செய்திகள்

துடியலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

Published On 2022-08-18 09:52 GMT   |   Update On 2022-08-18 09:52 GMT
  • டாக்டர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை:

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே திருச்சி மாவட்டம் அயனாம்பட்டியை சேர்ந்த பாரத் (வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பாரத்துக்கு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்றார். அப்போது அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் பாரத்தை அவரது நிறுவனத்தினர் பொள்ளாச்சியில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு பணி மாறுதல் செய்தனர். கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கள் மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை பாரத் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பாரத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News