உள்ளூர் செய்திகள்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 

பரமத்திவேலூர் சுந்தரராஜ பெருமாள், கஜலட்சுமி சாமிக்கு மகா கும்பாபிஷேகம்

Published On 2023-07-07 15:43 IST   |   Update On 2023-07-07 15:43:00 IST
  • நேற்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை
  • சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம்

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், செட்டியார் தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாள் மற்றும் கஜலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி காலை ஆலய சம்வத்சரா பிஷே கமும், காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வருதலும், மாலை மகா கணபதி பூஜை, முதற்கால யாக பூஜையும், யாகவேள்வி மற்றும் பூர்ணாகுதியும் நடைபெற்றது.

நேற்று அதிகாலை 2-ம் கால யாக பூஜையும், மகாபூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வல்லபா விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜபெருமாள், ஸ்ரீ கஜலட்சுமி தாயாருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News