உள்ளூர் செய்திகள்

ஆனங்கூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கஆனங்கூரில் விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-11-21 07:53 GMT   |   Update On 2023-11-21 07:53 GMT
  • அசம்பாவித சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆனங்கூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.
  • கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆனங்கூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.

போலீஸ் சூப்பிரண்டு

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆனங்கூர் ஊராட்சித் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலர் சந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

முற்றுப்புள்ளி

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:-

ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வரும் வன்முறை, அசம்பாவித சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்காங்கே வாழை மரங்களை வெட்டுதல், டிராக்டர்களுக்கு தீ வைத்தல், பாக்கு மரங்களை வெட்டுதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர், ஆனங்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொத்தமங்கலம், வடகரையாத்தூர், அ.குன்னத்தூர், பிலிக்கல்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News