உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து ஊழியர் படுகாயம்

Published On 2022-12-01 09:18 IST   |   Update On 2022-12-01 09:18:00 IST
  • திடீரென எதிர்பாராத விதமாக கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து சிதறியது.
  • வெங்கடாசலபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 24). இவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் 2-வது வார்டுக்குட்பட்ட செல்ல பெருமான் நகரில் வெங்கடாசலபதி பேட்டரி வாகனத்தில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரத்தின் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து சிதறியது.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடாசலபதிக்கு முகம், கழுத்து உடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் பேட்டரி வாகனமும் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் எரிந்துகொண்டு இருந்த வாகனத்தை மண்ணை தூவி தீயை அணைத்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலபதியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு வெங்கடாசலபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News