உள்ளூர் செய்திகள்

மொடக்குறிச்சி அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2024-11-17 12:23 IST   |   Update On 2024-11-17 12:23:00 IST
  • பைக்கை ஓட்டி வந்த குருசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 73) விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (72). இவர்களுக்கு பெரியசாமி (50) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இன்று காலை குருசாமி தனது மனைவி சரஸ்வதியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து கிளம்பி மொடக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வண்டியை குருசாமி ஓட்ட பின்னால் சரஸ்வதி அமர்ந்திருந்தார். இவர்கள் ஈரோடு-முத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அய்யகவுண்டன்பாளையம் அருகே செல்லும் போது சாலையில் பனி மூட்டமாக இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

குமாரசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நஞ்சை ஊத்துக்குளி தனியார் தீவன ஆலைக்கு சொந்தமான வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த குருசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மனைவி சரஸ்வதிக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த சரஸ்வதியை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News