ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் நந்தினி பேசினார்.
வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்- ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
- சேதமடைந்த வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர –வேண்டும்.
- ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம–டைந்திருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
தரங்கம்பாடி, டிச.18-
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை–களை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-
மோகன்தாஸ்:- மக்கள் கூடும் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
சாந்தி:- ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும்.
சக்கரபாணி:- மருதூர் நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்து வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக ஒரு வகுப்பறை கட்டிடம் தரவேண்டும்.
ராஜ்கண்ணன்:- மடப்புரம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
முத்துலட்சுமி:-ஆறுபாதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் பகுதிநேரஅங்காடி அமைத்து தர வேண்டும். ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் நிலத்தடிநீர் பாதிக்கும் வகையில் மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினி:-சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை ஆகிய ஊராட்சிகளில் மயான சாலை அமைத்து தர வேண்டும்.
இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும்.
தற்போது உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதில் மாவட்ட கவுன்சிலர்கள் வெண்ணிலா தென்னரசு, துளசிரேகா ரமேஷ் மற்றும் ஒன்றிய பொறியாளர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் இளநிலை உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.