உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே மாயமான இளம்பெண் சாக்கடையில் பிணமாக மீட்பு

Published On 2022-11-28 14:38 IST   |   Update On 2022-11-28 14:39:00 IST
  • 2 தினங்களுக்கு முன்பு நிஷாந்தி பெற்றோரிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார்.
  • போலீசார் நிஷாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வடவள்ளி,

கோவை வீரகேளம் பகுதியை சேர்ந்தவர் ராஜநாயுடு. இவருக்கு பத்மாவதி, நிஷாந்தி(26) என 2 மகள்கள் உள்ளனர்.

2 தினங்களுக்கு முன்பு நிஷாந்தி பெற்றோரிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நிஷாந்தியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வீரகேளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மை பணியாளர்கள் வந்தனர்.

அப்போது சாலையோரம் செல்லக்கூடிய சாக்கடை கால்வாயில் பெண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து வடள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சாக்கடைக்குள் பிணமாக கிடந்தது மாயமான நிஷாந்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நிஷாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News