உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினத்தில் லோடு ஆட்டோ மோதி மருந்து கடை ஊழியர் பலி- மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2022-08-31 08:50 GMT   |   Update On 2022-08-31 08:50 GMT
  • முகமது மைதீன் முபினின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
  • எலும்பு முறிந்த நிலையில் கதிர்வேல் மூர்த்தி திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் முபின் (வயது 25). இவர் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.

விபத்து

சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினம் பழைய பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ இவர் மீது மோதியது.

இதில் நிலைகுலைந்த முகமது மைதீன் முபினின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில் முகமது மைதீன் முபின் படுகாயம் அடைந்தார். சுயநினைவற்ற நிலையில் அவர் உடனடியாக பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் கனி மற்றும் கதிர்வேல் மூர்த்தி ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.

வழக்குப்பதிவு

எலும்பு முறிந்த நிலையில் கதிர்வேல் மூர்த்தி திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது மைதீன் முபின் நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News