கிருஷ்ணமூர்த்தி
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் சிறையில் அடைப்பு
- தங்க நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 13 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பொம்ம அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35), ஜவுளி வியாபாரி.
இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது தாயாருக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குடும்பத்தினருடன் அங்கு தங்கி உள்ளார்.
மேலும் ஜவுளி தொழில் செய்து வருவதால் வெளியூருக்கு சென்று வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30 -ம் தேதி வெளியூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காரிமங்கலம் பாலக்கோடு ரோட்டில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன்,சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகத்திடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மகேந்திரமங்கலம் அடுத்த ஊமையன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் கிருஷ்ணமூர்த்தி (38) என தெரியவந்தது.
மேலும் அவர்தான் பொம்மஅள்ளி சிவகுமார் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தங்க நகைகளை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 13 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.