அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேக விழா
- தருமபுரி வெளிப் பேட்டை தெரு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி நகர் வெளிப்பேட்டை தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் மதிப்பில் புனர–மைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கோவில் மகா கும்பா–பிஷேக விழா கடந்த 25-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூல மந்திர ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும், தீர்த்த குடம் மற்றும் புனித நீர் குடங்கள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகளும், தமிழ் மறை உபகார பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப் பட்டு பூர்ணாஹூதி நடை பெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று காலை மங்கள இசையுடன் யாக வேள்வி மற்றும் யாத்ரா தானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலஸ்தான கோபுரம், ராஜ கோபுரம் மற்றும் பரிவார மூர்த்தி கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகாதீபாரதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி பக்தர்க–ளுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வாணியர் சமூகத்தினர், எஸ்.எம். ஆறுமுகம் செட்டியார் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.