பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், காமிரா.
மோட்டார் சைக்கிளில் "வீலிங்" சாகசம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
- மோட்டார் சைக்கிளில் “வீலிங்” சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மாநகரில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.
மதுரை
மதுரை மாநகரில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.
எனவே இதில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சொக்கிகுளம், வல்லபாய் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வந்து, "வீலிங்" செய்து கொண்டிருந்தனர்.
அதனை ஒருவர் வீடியோ வாக பதிவு செய்து கொண்டு இருந்தார். உடனே தனிப்படை போலீசார் மேற்கண்ட 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், வீடியோ காமிரா, மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரித்ததில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று இன்ஸ்டா கிராம் மற்றும் யூ-டியூப் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.