உள்ளூர் செய்திகள்

ஏமன் நாட்டில் இருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை

Published On 2022-10-11 07:38 GMT   |   Update On 2022-10-11 07:38 GMT
  • மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டில் இருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் பணிபுரிந்து பின்னர் துபாய் வழியாக 3 பேர் விமானம் மூலம் மதுரை வந்தது கண்டறியப்பட்டது.

அவனியாபுரம்

துபாயில் இருந்து நேற்று மதுரைக்கு தனியார்விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் குடியேற்ற துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் பணிபுரிந்து பின்னர் துபாய் வழியாக 3 பேர் விமானம் மூலம் மதுரை வந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் பந்துரான் வட்டம், நாயன தெருவை சேர்ந்த சின்ன தம்பி மகன் ராஜா குட்டி (30), தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் மகாராஜபுரம் அக்ரகாரத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் ராஜ்குமார் (28), திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பாரதி நகரை சேர்ந்த வேலு கவுண்டர் மகன் சின்னப்பன் (39) ஆகிய 3 பேரும் ஏமன் நாட்டில் இருந்து மதுரை வந்தது தெரியவந்தது.

இந்திய பாஸ்போர்ட் விதிகளின்படி தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்றது குறித்து விசாரணை நடத்துவதற்காக 3 பேரும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News