உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி?-நீதிபதிகள் கேள்வி

Published On 2022-09-15 09:00 GMT   |   Update On 2022-09-15 09:00 GMT
  • சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது.
  • அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல்கள் திருடப்பட்டு உள்ளது.

மதுரை

கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல்கள் திருடப்பட்டு உள்ளது.

இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளைக் கொண்டும் ஆற்றுக்கு செல்வதற்கு பாதைகள் அமைத்து ஆற்று மணலை திருடி வருகின்றனர்.சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றி உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இருந்தும் சட்ட விரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? என கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது எனக் கூறி வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு பிறகு நடைபெறும் என்று தெரிவித்து ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News