உள்ளூர் செய்திகள்

குடும்ப பிரச்சினையில் குறி சொல்பவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-12-04 08:01 GMT   |   Update On 2022-12-04 08:01 GMT
  • குடும்ப பிரச்சினையில் குறி சொல்பவர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை கருப்பாயூரணி அருகே குன்னத்தூரில் 65 வயது மதிக்கத்தக்க நபர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் பிணமாக கிடந்தது அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என தெரியவந்தது.

ஊர், ஊராக சென்று குறி சொல்வது மற்றும் பரிகா பூஜைகள் செய்து வந்த இவருக்கு ராஜேசுவரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற வெள்ளையன் பின்னர் வீடு திரும்பவில்லை.

முன்னதாக அவர் குன்னத்தூரில் உள்ள ஒரு கடையில் உடுக்கை உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கி அதனை தனது மனைவியிடம் கொடுத்து விடுங்கள் என அங்கிருந்த ஒரு நபரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பையில் பெட்ரோல் கேன் இருப்பதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர்.

குன்னத்தூரில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்த வெள்ளையன் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த வெள்ளையன் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News