உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் வைக்கோல் பிரி போர்த்தி பல்வேறு வேடங்களில் பங்கேற்ற பக்தர்கள்.

ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா

Published On 2022-09-27 09:20 GMT   |   Update On 2022-09-27 09:20 GMT
  • மேலூர் அருகே இன்று ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
  • இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது. வெள்ளலூர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தலைமை இடமாக கருதப்படும் இதனை வெள்ளலூர் நாடு என்று அப்பகுதியினர் அழைப்பார்கள். இங்கு பிரசித்தி பெற்ற ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் நடைபெறும் இக்கோவில் திருவிழாவில் 60 கிராம மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிர கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழா தொடங்கியதில் இருந்து வௌ்ளலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கடும் விரதம் மேற்கொண்டனர். விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த 7 சிறுமிகள் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டும் 7 சிறுமிகள் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி நடுத்தர வயதுடைய பெண்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மதுக்கலயம் ஏந்தி வெள்ளலூர் ஏழைகாத்த மாரியம்மன் கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பெரிய ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

இதேபோல் ஆண்கள், சிறுவர்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி போர்த்தி பலவித வேடங்களை அணிந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பொதுமக்கள் பலர் சிறிய தெய்வ சிலைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால் வெள்ளலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.

Tags:    

Similar News