உள்ளூர் செய்திகள்

பாப்பாபட்டி அருகே பழமை வாய்ந்த நடுகல் கண்டெடுப்பு

Published On 2023-01-17 08:59 GMT   |   Update On 2023-01-17 08:59 GMT
  • பாப்பாபட்டி அருகே பழமை வாய்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
  • இங்குள்ள மக்கள் வளரி என்ற ஆயுதத்துடன் நெருங்கிய மற்றும் நீண்ட உறவினை கொண்டுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.

உசிலம்பட்டி

உசிலம்பட்டிக்கு தாலுகா பாப்பாபட்டி அருகே உள்ள கிராமம் லிங்கப்பநாயக்கனூர். இந்த ஊருக்கு வடக்கில் நாகமலை தொடர் உள்ளது. இந்த மலையில் ஒரு குன்றின் மீது பரமசிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலிக்கு செல்லும் வழித்தடத்தில் மலை அடிவாரத்தில் நடுகல் ஒன்று தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், பட்டி அருண் குமார், சோலை பாலு ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுகல் சுமார் 4½ அடி உயரத்திலும் சுமார் 3½ அடி அகலத்திலும் உள்ளது.

இந்த சிற்பத்தில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் காட்டப்பட்டுள்ளது .இதில் ஆணின் இடது கையில் வளரி, வளைத்தடியும், வலது கையில் வாளை உயர்த்திய நிலையிலும், அருகில் உள்ள பெண் சிற்பத்தின் இடது கையில் மலர் வைத்திருப்பது போலவும், இடது கை தொங்கிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளது.

இதில் ஆண் சிற்பத்தில் தலையின் இடது புறம் கொண்டையும், பெண் சிற்பத்தில் தலைக்கு மேலே கொண்டையும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.ஆண் மற்றும் பெண் சிற்பங்கள் மேல் ஆடையின்றி இடைக்கு கீழே ஆடையுடனும் நேர்த்தியான அணிகலன்களும் காணப்படுகிறது. இந்த சிற்பம் தோற்றத்தின் அடிப்படையில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

உசிலம்பட்டி பகுதியில் இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட நடு கற்கள் வளரியுடன் கரு மாத்தூர், கோட்டை ப்பட்டி, கள்ளப்பட்டி போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கருமாத்தூர் அருகே உள்ள கோவிலாங்குளத்தில் இன்றளவும் அங்குள்ள பட்டவன் சுவாமி கோவிலில் மாட்டுப்பொங்கல் அன்று கோவிலுக்கு வளரியை காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல இங்குள்ள குலதெய்வ கோயில்களில் சாமி பெட்டிகளில் வளரி வைத்து வழிபடும் வழக்கம் இந்த பகுதியில் இன்றளவும் உள்ளது. இங்குள்ள மக்கள் வளரி என்ற ஆயுதத்துடன் நெருங்கிய மற்றும் நீண்ட உறவினை கொண்டுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.

Tags:    

Similar News