உள்ளூர் செய்திகள்

பொங்கல் பரிசு 1000 ரூபாயை 39 ஆயிரம் பேர் வாங்கவில்லை

Published On 2023-01-30 13:52 IST   |   Update On 2023-01-30 13:52:00 IST
  • மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொங்கல் பரிசு 1000 ரூபாயை 39 ஆயிரம் பேர் வாங்கவில்லை.
  • இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

மதுரை

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

மதுரை-விருதுநகர்

மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 28 ஆயிரத்து 422 குடும்ப அட்டைகளுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 956 குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 பணம் வழங்க ரேஷன் கடைகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 983 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 29 பேர் மட்டுமே ரூ.1000 வாங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 439 குடும்ப அட்டை தாரர்களும், விருதுநகர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 927 குடும்ப அட்டை தாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.

ராமநாதபுரம்-சிவகங்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 742 குடும்ப அட்டைகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 316 குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 பணம் வழங்க ரேஷன் கடைகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 349 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ரூ.1000 வாங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 393 குடும்ப அட்டை தாரர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 332 குடும்ப அட்டை தாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களிலும் 39 ஆயிரத்து 91 பேர் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வாங்கவில்லை.

Tags:    

Similar News