சமையல் தொழிலாளி- பெண் உள்பட 3 பேர் தற்கொலை
- சமையல் தொழிலாளி- பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
- தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை
மதுரை அருகே சிலைமானை அடுத்துள்ள புளியங்குளம் கே.கே.நகரை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது40).சமையல் மாஸ்டரான இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. கண்ணிலும் பாதிப்பு இருந்தது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிரஞ்சீவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி யோகலட்சுமி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே எஸ்.கொடிக்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமுத்தாய் (50). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ராமுத்தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கணவர் செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோவிந்தன் (54). இவர் லெப்ரசி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். குடிப்பழக்கமும் இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தன் புது ராமநாதபுரம் ரோடு மாநகராட்சி வாகனம் நிறுத்துமிடம் எதிரே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவருடைய தம்பி கண்ணன் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.