உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி சிறுவர்களிடம் தங்க நகைகள் திருட்டு

Published On 2023-06-14 07:39 GMT   |   Update On 2023-06-14 07:39 GMT
  • திருமங்கலம் அருகே அங்கன்வாடி சிறுவர்களிடம் தங்க நகைகள் திருடப்பட்டதாக உதவியாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே லாலாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். ஆடு மேய்த்து வருகிறார். இவரது மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் அங்குள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடியில் படிக்கின்றனர். சம்பவத்தன்று அவர்களை பள்ளியில் இருந்து ஜெயராமன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது சிறுவனின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாயத்து காணாமல் போய் இருந்தது. வழியில் விழுந்திருக்கலாம் என நினைத்த ஜெயராமன் தேடிப்பார்க்க சென்றார்.

அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது அதே அங்கன்வாடியில் படிக்கும் முத்துமலை லட்சுமி மகன் முத்துவேல், கண்மணி செல்வன் மகன் வருண்பிரகாஷ், சங்கரேஸ்வரியின் மகள் கவுசிகா ஆகியோரின் தாயத்தும் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகமடைந்த அவர்கள் அங்கன்வாடி உதவியாளராக பணிபுரியும் பள்ளப்பசேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி தேவியிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதைத்தொடர்ந்து வில்லூர் ேபாலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News