மயிலம் அருகே அரசு பஸ் மீது சொகுசு பஸ் மோதல்- 32 பேர் காயம்
- சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகே பந்தமங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாலையன் (வயது 50) அரசு பஸ் டிரைவர்.இவர் திருவக்கரையிலிருந்து திண்டிவனம் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் திடீரென்று நிறுத்தி பயணிகளை ஏற்றியுள்ளார்.
அப்போது கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த கூட்டேரிப்பட்டை சேர்ந்த முனுசாமி மனைவி கவுரி( 42) உட்பட 32 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.