உள்ளூர் செய்திகள்

தெரு விளக்குகளை எல்.இ.டி. மின்விளக்குகளாக மாற்ற திட்டம்

Published On 2023-02-20 05:06 GMT   |   Update On 2023-02-20 05:06 GMT
  • தெரு விளக்குகள் சரியாக ஒளிர்வதில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
  • பழுதான மின் விளக்குகளை மாற்றியமைப்பதில் தொய்வு தென்படுகிறது.

திருப்பூர்:

மாநிலத்தில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு கம்பங்களில், டியூப் லைட், சி.எப்.எல்., சோலார் மின் விளக்கு என அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சமீப நாட்களாக திருப்பூரின் பல இடங்கள் மற்றும் பிற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக ஒளிர்வதில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:- வருகிற ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மின் சிக்கன நடவடிக்கையாக ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட உள்ளன.

ஒவ்வொரு உள்ளாட்சிகள் அமைப்புகளின் மக்கள் தொகை, மின் விளக்கின் தேவை சார்ந்து 20 வாட்ஸ், 40, 90 மற்றும், 120 வாட்ஸ் ஒளிரும் திறன் கொண்ட எல்.இ.டி., விளக்குகள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம் மூலம் பெறப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

இடைப்பட்ட சில மாத இடைவெளியில் பழுதாகும் மின் விளக்குகளை மாற்றியமைப்பதன் மூலம் ஏற்படும் செலவினத்துக்கு நிர்வாக அனுமதி கிடைக்குமா, பழுதாகும் மின் விளக்குகளுக்கு மாற்றாக புதிய மின் விளக்குகளை வாங்கலாமா என்பது போன்ற குழப்பம் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மத்தியில் எழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தான் பழுதான மின் விளக்குகளை மாற்றியமைப்பதில் தொய்வு தென்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News