உள்ளூர் செய்திகள்

ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை: வாலிபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது ரத்து- ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-07-10 10:53 GMT   |   Update On 2023-07-10 10:53 GMT
  • சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
  • குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.

சென்னை:

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்சி ஓட்டுனர். இவரது மனைவி ராமலட்சுமி(43) ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு சத்யா (வயது 20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரது மகன் மகன் சதீஷ்(23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். சதீசும், சத்யாவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு சத்யா பெற்றொர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், சதீசுடன் பேசுவதை சத்யா நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையம் நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த சத்யாவிடம் பேச முயற்சித்தார். அவர் பேச மறுக்கவே, அங்கு வந்த மின்சார ரெயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி சத்யா உடல் துண்டு துண்டானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். பின்னர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தன்னை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. கைது செய்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களை, தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சதீசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News