உள்ளூர் செய்திகள்

டிரைவரை கடத்தி பணம் கேட்டுநாடகமாடிய வாலிபர்களிடம் விசாரணை

Published On 2023-01-11 10:37 GMT   |   Update On 2023-01-11 10:37 GMT
  • சேலம் - திருப்பத்தூர் செல்லும் தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
  • பெற்றோர் மற்றும் ஆனந்தின் சகோதரி, அவர் கூறிய செல்போன் எண்ணிற்கு ரூ.5000 கூகுள்-பே மூலம் அனுப்பி உள்ளார்.

சேலம்:

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஆனந்த் (வயது 26).

இவர் சேலம் - திருப்பத்தூர் செல்லும் தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பஸ்சில் மாற்று டிரைவராக சங்ககிரியைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்த் தனது தந்தைக்கு போன் செய்து, தன்னை சிலர் கடத்தி வைத்துக் கொண்டு, தான் வாங்கிய கடன் தொகை ரூ.70 ஆயிரம் கட்டினால் தான் விடுவிப்பதாக மிரட்டுவதாகவும் கூறினார். இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் மற்றும் ஆனந்தின் சகோதரி, அவர் கூறிய செல்போன் எண்ணிற்கு ரூ.5000 கூகுள்-பே மூலம் அனுப்பி உள்ளார்.

பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதால் பதட்டம் அடைந்த ஆனந்தின் பெற்றோர், உடனடியாக புறப்பட்டு சேலம் வந்தனர்.

மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆனந்தின் செல்போன் என்னை வைத்து விசாரணை மேற்கொண்டதில், ஆனந்த் மற்றும் சதீஷ் ஆகியோர் குமாரபாளையத்தில் இருப்பது தெரியவந்தது.

இருவரையும் போலீசார் இன்று காலை சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இருவரும் குடிபோதையில் இருந்தபோது விளையாட்டாக இவ்வாறு செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆனந்த் மற்றும் சதீஷை போலீசார் கடுமையாக எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News