உள்ளூர் செய்திகள்

கரூர் மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி-அமைச்சர் பங்கேற்பு

Published On 2022-07-02 10:01 GMT   |   Update On 2022-07-02 10:01 GMT
  • கரூரில் கடந்த பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
  • மாணவர்களின் உயர்கல்வியை பெற்றோர்கள் தீர்மானிக்கின்றனர். அதனை மாணவர்களே தீர்மானிக்க வகை செய்யும் வகையில்தான் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

கரூர்:

நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு என்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசியதாவது:

நாட்டிலேயே பள்ளியில் சேரும் மாணவர்கள் விகிதாச்சாரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இதுவரை இல்லாத அளவாக தமிழக பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.42,563 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் உயர்கல்வி பயிலவேண்டும் என்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

மாணவர்களின் உயர்கல்வியை பெற்றோர்கள் தீர்மானிக்கின்றனர். அதனை மாணவர்களே தீர்மானிக்க வகை செய்யும் வகையில்தான் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நம்மால் முடியாதது எதுவுமில்லை.

முயன்றால் முடியும். அரசுப் பள்ளியில் பயின்று அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானியானார். அரசுப் பள்ளி மாணவர்களும் உயர்கல்வியை அடையமுடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் வரவேற்றார். கடந்தாண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News