உள்ளூர் செய்திகள்

கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவில் தேர்த் திருவிழா

Published On 2023-03-29 15:13 IST   |   Update On 2023-03-29 15:13:00 IST
  • கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா வரும் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது.
  • தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா வரும் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக விஜயகிரி பழனியாண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விஜயகிரி பழனியாண்டவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் சாமி ஊர்வலமும், வரும் சனிக்கிழமை சாமி மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஞாயி ற்றுக்கிழமை அன்று சாமி யானை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், திங்கட்கிழமை திருக்கல்யாணம் உற்சவம், பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று உத்திர நட்சத்திரத்தில் காலை 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் விஜயகிரி பழனியாண்டவர் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதியில் வழியாக சென்று மீண்டும் நிலை சேர்கிறது.

வியாழக்கிழமை அன்று கொடி இறக்கும் நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News