பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு அன்னதானம்
- செயலாளர் தம்பித்தங்கம் தொடங்கி வைத்தார்
- காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
4-ம் திருவிழாவான நேற்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், களபம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 1000 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.
இதனை காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித்தங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் சுரேஷ், கன்னியாகுமரி பார்க்வியூ பஜார் வியாபாரிகள் சங்க செயலாளர் பகவதியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.