உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழா

Published On 2023-03-25 07:32 GMT   |   Update On 2023-03-25 07:32 GMT
  • நள்ளிரவு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது
  • பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலில் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

கன்னியாகுமரி :

தென் தமிழகத்தில் பெண்கள் வழிபாட்டுக்கும் பகவதி வழிபாட்டுக்கும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த 5 -ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14ம் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித தீர்த்தமாடி நேர்ச்சை கடன் செலுத்தி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. தொடர்ந்து அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று இன்று பரணிக் கொடைவிழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது. மாலையில் தங்கரதம் உலா, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி, நள்ளிரவு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இப்பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை, பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நாளை மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

Tags:    

Similar News