உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கோவிலில் நகை-பணம் கொள்ளை

Published On 2023-09-11 13:25 IST   |   Update On 2023-09-11 13:25:00 IST
  • சுவர் ஏறி குதித்து மர்ம நபர் துணிகரம்
  • பழைய குற்றவாளிகளின் படத்துடன் ஓப்பிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் முருகன்குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினமும் காலை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்தக் கோவிலில் வெள்ளி மற்றும் முக்கிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவு வருவது உண்டு. அப்போது அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் பாதுகாப்புக்காக கோவிலில் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நேற்று மாலை பூசாரி, கோவிலில் பூஜைகள் முடிந்ததும் கதவை பூட்டிச் சென்றார். அதன்பிறகு இன்று காலை அவர் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் வாசலில் கண்காணிப்பு காமிராக்கள் உடைந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோவிலுக்குள் சென்றார்.

அங்கு அன்னதானத்திற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்த வைத்திருந்த உண்டியல் உடைந்து கிடந்தது. எனவே கோவிலுக்குள் யாரோ புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

அவர்கள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். கோவிலை சுற்றி வந்து பார்த்தபோது, அங்குள்ள புவனேசுவரி அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடை கொண்ட தங்கத் தாலியும் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மேலும் கோவிலின் வேல் மண்டபத்தில் இருந்த வேல்களை திருட முயற்சி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஓருவன், கோவிலுக்குள் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது. அவன் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவன் கோவிலுக்குள் சுவர் ஏறி குதித்து வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். காமிராவில் பதிவான உருவத்தை, பழைய குற்றவாளிகளின் படத்துடன் ஓப்பிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்குள் மர்ம நபர் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News