உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே போர்வெல் நிறுவன மேலாளர் மர்மச்சாவு - போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-09-04 06:41 GMT   |   Update On 2023-09-04 06:41 GMT
  • மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் அலுவலகம் வந்து ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.
  • ராமசாமியின் இடது கண், இமை, நெற்றி ஆகிய பகுதிகளில் காயம் உள்ளதாக தெரிகிறது

இரணியல் :

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள போர்வெல் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்தவர் ராமசாமி (வயது 56). இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அகரம் கிராமம் கொத்தம்பாளையம் ஆகும்.

திங்கள் நகரில் உள்ள போர்வெல் அலுவலகத்திலேயே ராமசாமி தங்கி உள்ளார். நேற்று முன்தினம் மதியம் அவர் போர்வெல் லாரியை திக்கணம்கோட்டில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் அலுவலகம் வந்து ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் மாடத்தட்டுவிளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் போர்வெல் நிறுவனத்துக்கு வந்துள்ளார். அங்கு யாரும் இல்லாததால் பக்கத்து அறையை எட்டி பார்த்தபோது ராமசாமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போர்வெல் கம்பெனி ஊழியர் கவியரசனுக்கு தகவல் கொடுத்தார்.

அவர் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ராமசாமியை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ராமசாமியின் இடது கண், இமை, நெற்றி ஆகிய பகுதிகளில் காயம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் எப்படி இறந்தார்? திக்கணம்கோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்தில் சிக்கினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News