உள்ளூர் செய்திகள்

3-வது நாளாக கடல் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் ரத்து

Published On 2023-06-19 14:30 IST   |   Update On 2023-06-19 14:30:00 IST
  • அமாவாசை முடிந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது
  • 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி கடலில் கடந்த 2 நாட்களாக சில மணி நேரம் கடல் உள்வாங்கி வருகிறது. அமாவாசை முடிந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் உள்வாங்குதல் மற்றும் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இன்று 3-வது நாளாக கன்னியாகுமரியில் கடல் ஒரு புறம் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இருப்பினும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

Tags:    

Similar News