உள்ளூர் செய்திகள்

வியாபாரி-டிரைவர் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு

Published On 2023-07-24 14:19 IST   |   Update On 2023-07-24 14:19:00 IST
  • புதுக்கடை போலீசார் இரு தரப்பிலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • புதுக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில் சஜின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி :

புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் அஜின் (வயது 40). இவர் தனது அண்ணன் ஸ்டாலின் என்பவருடன் சேர்ந்து விழுந்தயம் பலம் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் அதே பகுதி அருவை என்ற இடத்தை சேர்ந்த அஸ்வின் (27) என்பவர் ஸ்டாலினை சிலருடன் சேர்ந்து கும்பலாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக புதுக்கடை போலீசில் வழக்கு பதிவாகியுள்ளது. இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஸ்டாலின் தம்பி அஜின் நடந்து செல்லும்போது, அங்கு வந்த பிரபு (23), அஸ்வின், விஷ்ணு (27), அபி (24) ஆகியோர் அஜினை தடுத்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அஜின் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக பிரபு என்பவர் சம்பவவத்தன்று இரவு அஜின், ஸ்டாலின் இணைந்து தன்னை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார். இதில் காயமடைந்ததால் பிரபுவும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கடை போலீசார் இரு தரப்பிலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேங்காபட்டணம் அருகே உள்ள பனங்கால்முக்கு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சுஜின் (23). இவர் டிரைவர் வேலை செய்கிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஜின் (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுஜின் தனது வாகனத்தை அங்குள்ள பெட்ரோல் பாங்க் அருகே நிறுத்திவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரில் வந்த சஜின் வழிமறித்து சுஜினை தாக்கியுள்ளார். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியும் பறித்து சென்றுள்ளார். இது தொடர்பாக சுஜின் புதுக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில் சஜின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News