நாகர்கோவில் அருகே பாலத்தில் அமர்ந்தபோது ஆற்றுக்குள் தவறி விழுந்த வங்கி ஊழியர் பலி
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
- நீண்ட நேரமாகியும் அவரை யாரும் காப்பாற்றாததால் அவர் பரிதாபமாக இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி:
நாகர்கோவிலை அடுத்த கோணம் ஆற்றுப்பாலத்தின் கீழ் ஒருவர் இன்று பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் பிணமாக கிடந்தவர் நாகர்கோவில், புன்னைநகர், முனிசிபல் காலனி பகுதியைச் சேர்ந்த தினகரன் (வயது 54 ) என்பது தெரியவந்தது.
இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை ஆற்றுப்பாலம் அருகே நிறுத்தி விட்டு ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவரில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தினகரன் ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதை யாரும் பார்க்கவில்லை. இதனால் அவர் இரவு முழுவதும் ஆற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் அவரை யாரும் காப்பாற்றததால் அவர் பரிதாபமாக இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
போலீசார் தினகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான தினகரன் வங்கி ஊழியராக பணியாற்றி உள்ளார்.தற்பொழுது ஆன்லைனில் வியாபாரம் செய்து வந்தார்.பலியான தினகரனுக்கு ஜீவ லதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.