கூண்டு கட்டிய மீன் வண்டியில் கடத்த முயன்ற 6 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்
- களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கடத்தல்
கன்னியாகுமரி :
தமிழக-கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தனிப்பிரிவு போலீசார் களியக்காவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக மீன் ஏற்றி செல்லும் கூண்டு கட்டிய டெம்போ ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த டெம்போவை நிறுத்து மாறு சைகை காட்டியும் டெம்போ நிற்காமல் சென்று விட்டது.
அந்த வாகனத்தை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மேக்கோடு பகுதியில் வைத்து துரத்தி பிடித்தனர். ஆனால் டிரைவர் வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும், அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவல கத்திலும் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய ஓட்டுநர் யார்? ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோ ணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.