புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
- குன்னத்தூர் பகுதியில் இருந்து முஞ்சிறைக்கு செல்லும் சாலையில் விபத்து
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். மனைவி மேரி ராஜம் (வயது 72). சம்பவத்தன்று குன்னத்தூர் பகுதியில் இருந்து முஞ்சிறைக்கு செல்லும் சாலையில் மேரி ராஜம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மேரி ராஜம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
ஆனால் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து மேரி ராஜத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மேரி ராஜம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக மேரி ராஜம் மகள் ஹெலன் மேரி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.