ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள புதுக்குளம் கண்மாய்.
கண்டமனூர்: ஆக்கிரமிப்பில் உள்ள கண்மாயை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- மரம், செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால், மழை பெய்து ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டாலும், கண்மாயில் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- நீரை தேக்கி வைத்தால் கண்டமனூர் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படையும்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்டமனூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலப்பரப்பளவில் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை சுற்றிலும் ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்டமனூர் பெரிய ஓடையில் இருந்து கண்மாய்க்கு வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தனி நபர்கள் சிலர் கண்மாயில் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மற்ற பகுதிகள் அனைத்திலும் மரம், செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்து ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டாலும் அதனை கண்மாயில் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கண்மாயில் ஆக்கிரமி ப்புகளை அகற்றி முழுமை யாக நீரை தேக்கி வைத்தால் கண்டமனூர் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படையும். மேலும் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் நீங்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதுக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.