உள்ளூர் செய்திகள்

பலாப்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

சிறுமலையில் பலாப்பழ விளைச்சல் அமோகம்

Published On 2022-06-27 08:04 GMT   |   Update On 2022-06-27 08:04 GMT
  • திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதிகளில் விவசாயிகள் பலா,எலுமிச்சை,மிளகு, வாழை, அவகோடா, சவ்சவ் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
  • நீண்ட நாட்களுக்கு பிறகு பலா விற்பனை களை கட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சிறுமலை வனப் பகுதியான பழையூர், புதூர், அகஸ்தியர்புரம், தென்மலை, தாழக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பலா,எலுமிச்சை,மிளகு, வாழை, அவகோடா, சவ்சவ் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டது.இதனால் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. விவசாயிகளும் மழை இல்லாமல் மிகவும் நஷ்டத்தை சந்தித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்தது.இதனால் விவசாயிகள் ஆர்வமாக விவசாய பணிகளை தொடங்கினர்.

இப்பகுதியில் முக்கியமாக பலா அதிகமாக விளைவிக்கப்படுகிறது.இங்கிருந்து திண்டுக்கல் நாகல்நகர் பாலம் அடியில் உள்ள சிறுமலை செட்டிற்கு அனுப்பப்படுகிறது.அங்கு வரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பலாப் பழங்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

தற்போது பலாப்பழங்கள் நன்கு வளர்ந்து விளைச்சல் அமோகமாக உள்ளது.எனவே சிறுமலை செட்டிற்கும் அதிக அளவில் பலாப்பழங்கள் வரத்தொடங்கி உள்ளன.ஒரு பழம் 5 கிலோ முதல் 50 கிலோ வரை உள்ளது.இந்த பழங்கள் ரூ.50-ல் இருந்து தரத்திற்கேற்ப ரூ.700 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.

இங்கிருந்து திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வெளியூர் வியாபாரிகள் நேரடியாக வந்து பலாவை விற்பனைக்காக வாங்கிச் செல்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பலா விற்பனை களைகட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.

Tags:    

Similar News