உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் மின்சாரம் பாய்ச்சி கொலையா?

Published On 2022-09-24 09:58 GMT   |   Update On 2022-09-24 09:58 GMT
  • 500 மீட்டர் தொலைவுக்கு எந்த ஒரு மின் இணைப்பும் இல்லை.
  • சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ருத்திராயம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித் (வயது 22). பெயிண்டர். இவரது மனைவி மகேஷ்(21). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சம்பவத்தன்று மது போதையில் இருந்த சுஜித் தனது மனைவியிடம் கஞ்சம்பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது மனைவி தேடினார். அப்போது கஞ்சம்பள்ளியில் உள்ள சென்னியப்பன் என்பவரது தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். இது குறித்து அவர் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுஜித் இறந்து கிடந்த பகுதியில் இருந்த 500 மீட்டர் தொலைவுக்கு எந்த ஒரு மின் இணைப்பும் இல்லை. எனவே அவரை யாராவது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்து விட்டு இங்கு தூக்கி வீசி விட்டு சென்றார்களா? என்பது தெரிய வில்லை.

பின்னர் போலீசார் சுஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News