கோவை அரசு ஆஸ்பத்திரியில் போட்டி போட்டு சத்து மாத்திரைகளை தின்ற 4 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை
- இந்த பள்ளியில் 249 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
- ஆம்புலன்சுகள் மூலம் 4 பேரும் கோவை கொண்டு வரப்பட்டனர்.
கோவை,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 249 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளி மாணவர்களுக்கு நேற்று தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மாத்திரைகளை போட்டி போட்டு சாப்பிட்டுள்ளனர்.
3 மாணவிகள் 30 மாத்திரைகளையும், ஒரு மாணவி 60 மாத்திரைகளையும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 4 மாணவிகளும் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக 4 பேரையும் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 4 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் ஆம்புலன்சுகள் மூலம் 4 பேரும் கோவை கொண்டு வரப்பட்டனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவர்களுக்கு எப்படி அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகள் கிடைத்தது என்பது பற்றி சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் சம்பவம் குறித்து ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.