உள்ளூர் செய்திகள்

உடுமலையில் மண்பானைகள் உற்பத்தி தீவிரம்

Published On 2022-12-31 10:16 IST   |   Update On 2022-12-31 10:16:00 IST
  • பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது.
  • பொங்கல் வைக்க மக்கள் ஆர்வம் காட்டுவதால், விற்பனை அதிகரிக்கிறது.

உடுமலை :

தமிழர்களின் பாரம்பரிய விழாவாக தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அறுவடைத்திருநாளாகவும் உயிர் வாழ ஆதாரமாக உள்ள இயற்கைக்கும், உழவுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில் தை முதல் நாள் சூரியனுக்கும், இரண்டாம் நாள் கால்நடைகளுக்கும் காணும் பொங்கலன்று நீர் நிலைகளுக்கும் நன்றி சொல்லும் விழாவாக திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி கிராமங்கள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் இன்றளவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழாவில் புதிய மண் பானையில் புத்தரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இட்டு பொங்கல் வைக்கப்படுகிறது. தைப்பொங்கல் திருநாளிற்கு 2வாரமே உள்ள நிலையில் பொங்கலுக்கு மண் பானைகள், மண் அடுப்பு, தட்டு ஆகியவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உடுமலை, பள்ளபாளையம், புக்குளம், பூளவாடி, எஸ்.வி., புரம் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். மண்பாண்டம் தயாரிப்புக்கு என உள்ள குளங்களில் இருந்து மண் எடுக்கப்படுகிறது. இந்த செம்மண் மற்றும் களிமண், மணல் ஆகியவற்றை வடிகட்டி சேறு போல் தயாரித்து சக்கரத்தில் வைத்து மண் பானை தயாரிக்கப்படுகிறது.

பின்னர் உலர வைத்து நெளிவுகள், மரக்கட்டையால் மெதுவாக தட்டி சரி செய்யப்படுகிறது. அதற்குப்பிறகு சூளையில் இட்டு வேக வைத்து விற்பனைக்கு தயாராகிறது.அரை கிலோ முதல் 2 கிலோ வரை பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் மண் பானை தயாரிக்கப்படுகிறது. புதிய மண் பானையோடு தட்டு, அடுப்பு என அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகிறது.

அரை கிலோ கொள்ளளவு கொண்ட மண் பானை ரூ.90 , ஒரு கிலோ ரூ.120,இரண்டு கிலோ 180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சிறிய மண் அடுப்பு 130 ரூபாய்க்கும், பெரியது 180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.தொழில் நுட்ப வளர்ச்சியால் மண் பானை பயன்பாடு குறைந்தாலும் இன்றளவும் பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது நகரப்பகுதிகளிலுள்ள மக்கள், மண் பானைகளில் பொங்கல் வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து மண்பானை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-ஒரு காலத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. முதல் நாள் சூரியனுக்கு, அடுத்த நாள் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு விவசாயிகளும் ஏழு பொங்கல் 11 என பொங்கல் வைத்து வந்தனர். அதற்காக பொங்கல் பானைகள் வாங்குவர்.

கிராமத்திற்கு 500 பொங்கல் பானைகள் விற்று வந்தது. தற்போது உலோக பாத்திரங்கள் வருகை காரணமாக மண் பானை பயன்பாடு குறைந்தாலும் பாரம்பரியமாக மண் பானையில் பொங்கல் வைப்பது தொடர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் இதில் பொங்கல் வைக்க மக்கள் ஆர்வம் காட்டுவதால், விற்பனை அதிகரிக்கிறது.

மண் பாண்ட தொழிலாளர்களும் குறைந்த நிலையில், குறைந்த அளவே மண்பானைகளும் தயாரிக்கப்படுகிறது. உடுமலை சுற்றுப்பகுதிகளில் உற்பத்தியாகும் பானைகள், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. பானை தயாரிக்க மண் எடுத்து வருவது முதல் அதனை சூளையில் வேகவைத்து விற்பனைக்கு அனுப்புவது வரை ஒரு மாதம் வரை ஆகிறது.தற்போது மண் பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு சூளையிடும் பணி, இயற்கை வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. நடப்பாண்டு பொங்கலுக்கு மண் பானைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வாறு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News