பேராவூரணி ரெயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு.
பேராவூரணி ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரி ஆய்வு
- அனைத்து விரைவு ரெயில்களும் பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால், மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ரெயில்வே அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் அசோக்குமார் எம்.எல்.ஏ., நகர வர்த்தகர் கழகம், ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம், பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிரு ப்பதாவது:-
காரைக்குடியில் இருந்து பேராவூரணி வழியாக இரு முனைகளில் இருந்தும் சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும். காரைக்குடி -திருவாரூர் பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். இதே வழித்தடத்தில் இரவு நேர கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வந்த ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.
பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். முன்பதிவு மையத்தை தொடங்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு பயண கட்டண சலுகை வழங்க வேண்டும் இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் போது பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், முன்னாள் வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், ரயில் பயனாளிகள் சங்க தலைவர் மெய்ஞானமூர்த்தி, பாரதி நடராஜன், வர்த்தகர் கழக கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் கந்தப்பன், அப்துல் மஜீது, அபிராமி சுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.