திண்டுக்கல் ரவுண்டு ரோடு எழில்நகர் பகுதியில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.
திண்டுக்கல்லில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
- திண்டுக்கல்லில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளில் பாதியளவு பிளாஸ்டிக் குப்பைகளே ஆகும்.
- அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு திண்டுக்கல்லில் அதிகரித்து வருகிறது.
குள்ளனம்பட்டி:
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன பைகளை தடை செய்து அரசு ஆணை வெளியிட்டது. ஆனால் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உபயோகத்தை தவிர்க்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல்லில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளில் பாதியளவு பிளாஸ்டிக் குப்பைகளே ஆகும்.எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிர்வாகம்,கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகாரிகள் பெயருக்காக ஆய்வு செய்து வருகின்றனர். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு திண்டுக்கல்லில் அதிகரித்து வருகிறது.
தற்சமயம் பருவமழை தொடங்கியுள்ளதால்மக்கள் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக்குகளும், கழிவுநீர் வெளியேறும் வாய்க்காலில் அடைத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் குப்பைகளில் சேரக்கூடிய பொருட்களில் கேரி பேக்குகளில் இருக்கும் உணவுப்பொருட்களை கால்நடைகள் உண்பதால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறது.
இதற்கு முழு காரணம் துறை சார்ந்த அரசு அதிகாரிகளே என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காமல் அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.