உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

Published On 2023-02-05 07:29 GMT   |   Update On 2023-02-05 07:29 GMT
  • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
  • பேரூராட்சி ஊழியர்கள் தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம்:

தொடர்மழை காரணமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காய்ச்சல்

சமீபத்தில் 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் முற்றியதில் மூளைக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகி நெல்லை அரசு மருத்தவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து இவ்வட்டாரத்தில் சுகாதாரத்துறை ஆய்வு செய்து டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், 5 நாள் தொடர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையை நாடினால் அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாகவும், சில நேரத்தில் பணியாளர்களே சிகிச்சை மேற்கொள்கின்றனர் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோரிக்கை

மழை நீடிப்பதால் ஆங்காங்கே தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பேரூராட்சி ஊழியர்கள் தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வீடுகளில் தொட்டிகள், குடங்களில் நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் மழைநீரில்தான் டெங்குவை பரப்பும் கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

எனவே தண்ணீரை நாள் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொட்டிகளை 6 நாட்களுக்கு ஒரு முறை உரிய மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News