உள்ளூர் செய்திகள்

ஓசூரில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை: 3 தொழிற்சாலைகளில் இரவு வரை நீடித்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

Published On 2022-07-07 15:32 IST   |   Update On 2022-07-07 15:32:00 IST
  • 15 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் 3 குழுக்களாக சோதனை நடத்தினர்.
  • 3 தொழிற்சாலைகளிலும், இரவு 10.30 மணி வரை நடந்த இச் சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

ஓசூர்,

ஓசூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான 3 பிரபல மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

காய்ச்சலுக்கு நிவாரணியாக பயன்படுத்தப்படும் டோலோ 650 என்ற மாத்திரை மற்றும் ஏராளமான மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு ஓசூரில் இயங்கி வருகிறது.

வருமானவரித்துறை ஏய்ப்பு முறைகேட்டில் எழுந்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் திலீப் சுரானா மற்றும் இயக்குனர் ஆனந்த் சுரானா ஆகியோரது வீடுகளில் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

மேலும் இவர்கள், தமிழ்நாடு, மும்பை, டெல்லி, சிக்கிம் ,கோவா உள்பட நாடு முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 3 தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் 3 குழுக்களாக சோதனை நடத்தினர்.

இந்த அதிகாரிகள் பெங்களூரிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. 3 தொழிற்சாலைகளிலும், இரவு 10.30 மணி வரை நடந்த இச் சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News