கைதான இருவரையும் படத்தில் காணலாம்.
மத்தூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
- கைதான இருவரிடம் இருந்து 9 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பல்வேறு இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மத்தூர்,
ஊத்தங்கரை அருகேயுள்ள மத்தூர் போலீஸ் சரக பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து டி .எஸ்.பி.அலெக்சாண்டர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நேரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொடமாண்டபட்டி கூட்டுரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகப்படும்படி இருந்த 2 பேரை பிடித்தது விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர் .
இதனால் அவர்களை மத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம் கரம்பூரை சேர்ந்த சக்திவேல், மேகநாதன் ஆகிய அந்த 2 பேரும் மத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 9 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.